Saturday, 18 May 2013

வாங்க, சேர்ந்து மகிழலாம்..!



                  "ஏதடா கவிஞன் நெஞ்சில் 
                          என்னதான் துயரம் என்று 
                   வாதிட வேண்டாம். நானே,
                            வாங்கிய வரத்தின் வேகம்!
                   மோதுவதாலே இன்று 
                            முழுவதும் அழுகைப்  பாட்டு
                    தூதுபோய் தீருமென்றால் 
                            துயரத்தை சொல்ல மாட்டேனா? " - கண்ணதாசன்

..............................................................................................................................

"அன்புக்கு இருவர் வேண்டும், 
          அழுகைக்கு ஒருவர் போதும்!
இன்பத்துக் இருவர் வேண்டும்,
        ஏக்கத்துக்கு ஒருவர் போதும்! 
துன்பத்தை தனிமையாக 
        சுவைப்பது போல வாழ்வில் 
இன்பத்தைச் சுவைப்பது இல்லை!
         இயற்கையின் சட்டம் ஈது!"- கண்ணதாசன்.

Thursday, 16 May 2013

மக்களிடம் வாக்கு கேட்காத மன்மோகன் சிங் .

         
           ஜனநாயகத்தின் உன்னதமே தேர்தலில் போட்டியிட்டு,மக்களைச் சந்தித்து  வாக்குறுதிகள் கொடுத்து  வாக்காளர்களின்  அபரிமிதமான வாக்குகளைப் பெற்று, சட்டமன்றத்திலோ,நாடாளுமன்றத்திலோ இடம்பெறுவதும் கடமையாற்றுவதும் தான்!

          அவ்வாறு மகளைச் சந்தித்து வாக்கு கேட்டோ,அமோக வெற்றி அடைந்தோ, நாடாளுமன்றத்திற்கு செல்லாமல்,குறுக்கு வழியில் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வருபவர்கள் சிலர் இந்திய அரசியலில் இருக்கிறார்கள்!

       அவர்களில் முதன்மையானவர் நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்! இதுவரை நமது பிரதமர் மன்மோஹன்சிங் மக்களவை எனப்படும் லோக் சபா தேர்தலில் நின்றவர் இல்லை. ஒவ்வொருமுறையும் ராஜ்ய சபை  எம்.பி.ஆக  பாராளுமன்றத்திற்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளார்!

       பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மன்மோகன் சிங்  1991-யில் முதல்முறையாக ராஜ்ய சபை  எம்.பி-ஆக அஸ்ஸாமில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 1996-யில் அஸ்ஸாமிலிருந்து 2-வது முறை தேர்வு செய்யப்பட்டு, நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராக ஆனார், இவ்வாறு நான்குமுறை 20 ஆண்டுகளுக்கு மேலாக  ராஜ்யசபை எம்.பி-யாக இருந்தவர்,தனது பதவிக் காலம் ஜூன் 15-ஆம் தேதியுடன் முடிவடைவதால்,மீண்டும்  5-வது முறையாக  ராஜ்யசபைக்கு தேர்வு செய்ய  அஸ்ஸாமில்  (15.05 2013) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.! 

          மக்களை சந்திக்காமல்  பதவிக்கு வரும் ஜனநாயகம் என்ன ஜனநாயகம்?  இவரைபோன்றவர்கள்   மக்களின் நலனுக்காக செயல்படுவார்கள்  என்பதை எப்படி நம்ப முடியும்? மன்மோகன் சிங் போன்றவர்கள்  மக்களாட்சித் தத்துவத்தை கேலிக் ஆளாக்குகிறார்கள் !

           80-வயது ஆகும்  நமது பிரதமர்   அனேக தேர்தல்களில் வாக்களிக்காமல் இருந்தவர் என்பது இவர்மீது கூறப்படும் மற்றொரு விமர்சனமாகும்!




Tuesday, 14 May 2013

மோடியின் மறுபக்கம்..

           இந்தியாவை வாழ்விக்க வந்த அவதார புருஷராக நரேந்திர  மோடியை சிலர் சித்தரித்து வருகின்றனர்.

     மோடி இந்துக்களின்  குடும்ப உறவை  கொச்சைபடுத்திய, பெண்ணின துரோகி.!  இவர்  யசோதா பாய் என்ற பெண்ணை இளைய வயதில்   திருமணம் செய்து, கைவிட்டவர் என்பது சமீபத்தில் தெரிய வந்திருகிறது! சிறிய அறையில் இன்றும் வசித்துவரும் அந்த பெண் மோடிக்கு பயந்து,மோடி  தன்னை   திருமணம் செய்ததை வெளிபடுத்தாமல் வாழ்ந்து வருவதாக தெரிவித்து உள்ளார்! மோடி இதுவரை அதனை மறுக்கவில்லை, பத்திரிக்கைகளும் அவரிடம் கேட்காமல் இருந்துவருகின்றனர்!


        மனசாட்சியில்லாத,ஒரு பெண்ணை நிராதரவாக விட்ட அரக்க மனம் கொண்ட மோடி  2002-யில்   கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்.இவரது தலைமையில் அமைச்சராக இருந்த மாயா கோட்னானி என்பவர்  குஜராத் கலவரத்தில் நரோடா  பாட்டியா என்ற இடத்தில நடந்த கலவரத்தில் 98 பேர்கள் கொல்லப்பட்டதற்கு  காரணமான    குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டு  28-ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார்.தூக்கு தண்டனை விதிக்கவேண்டும் என்ற மேல்முறையீட்டு மனு செய்யப்போவதாக அறிவித்து,தனக்கும் கலவரத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று அப்போது காட்டிக்கொண்ட  நரேந்திர மோடி அந்த முடிவை மறுபரிசிலனை செய்வதாக இப்போது அறிவித்து உள்ளார்.

        இதன்மூலம் குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்தி,அப்பாவி முஸ்லிம்களை கொன்று,இளம்பெண்களைக் கற்பழித்து,கர்ப்பிணி பெண்களின் வயிற்றைக் கிழித்து, எரியும் நெருப்பில் உயிருடன் போட்டு எரித்து, முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிய அனைத்து குற்றங்களையும் செய்த குற்றவாளிகளை காப்பாற்றவும் அவர்களுக்கு ஆதரவாகவும் மோடி இருந்துவருகிறார் என்பது உண்மையாகிறது!

      
         அமெரிக்கா தனது மண்ணில் காலடிஎடுத்து வைப்பதை விரும்பாமல் மோடிக்கு அனுமதி மறுத்து வந்தது.  மோடியின் முகத்தில் அமெரிக்க வாழ் இந்தியபெண் சமீபத்தில்  காறிதுப்பி உள்ளார்!,

         மோடியின் மனிதவேட்டை, முஸ்லிம்களின் படுகொலைகள், 2002-யில்  நடந்தேறிய கொடூரம் ஆகியவைகளை மறைத்துவிட்டு, குஜராத்தைப் பாருங்கள், அப்படியே இந்தியாவும் ஆக வேண்டும் என்று காவிக் கும்பலும், இந்துத்துவ மதவாதிகளும் நரேந்திர மோடியைத்   தாங்கி வருகின்றனர்!

     நரேந்திரமோடி முதலில் மனிதனாக மாற வேண்டும்.,செய்த தவறுகளுக்கு முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்  செய்த குற்றங்களை தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்டு,தண்டனையை ஏற்கவேண்டும்!   கைவிடப்பட்ட தனது மனைவி யசோதா பாய் காலில் விழுந்து மன்னிப்பு கோரவேண்டும்! . அப்புறம் நாட்டை காப்பாற்றுவது குறித்து அவர்  யோசிப்பதுதான்  முறையாகும்.!




நான் சுடாத (எழுதிய ) கவிதை !

 இன்பமென்னும் முழு நிலவே ,
        எழில் செய்ய வாராயோ?
துன்ப இருள் நீயின்றி,
      துடைப்பது யார் கூரையோ?

குழல் அவிழ்ந்து மண்படர,
      குல மகளே நீ நடந்தால்;
நிழல் போல உனைத் தொடர்ந்து
     நெஞ்சம் வரக் காணாயோ?  ( இன்பமென்னும்..)

வானவில்லில்  தொட்டிலிட்டு,
        வண்ண மலர் மேற்பரப்பில்
 நான் அவளைத்  தாலாட்ட
        நாளெல்லாம் நினைத் திருந்தேன்!

  கருநீல விழி கூறும்..,
        கவிதைகளை படிக்க வந்தேன்!
  கண்ணீரில் தோன்றும் இந்த
        கவிதைகளை தூது விட்டேன்! ( இன்பமென்னும்..)

கற்பனையின் எல்லை தனை,
      கடந்து விட்ட பேரெழிலே!
அற்புதமான அழகுதனை
    அளிக்க வந்த புவிநிலவே.!

துன்பத்தைக் கருவாக்கி
     தோன்றுகின்ற கவிதைகள்தான்
இன்பத்துள் இன்பத்தை,
    ஏற்படுத்தும் கவிதைகளாம்..! ( இன்பமென்னும்..)
     

Monday, 13 May 2013

எப்போதோ சுட்ட (படித்த ) கவிதை!

  அது எனது கல்லூரிக் காலம். எல்லா இளசுகளுக்கும் பிடிக்கும் கவிதைகள் எனக்கும் பிடித்து இருந்தது.!  இளமையில்  படித்த கவிதைகள் பல.. அதில் ஒன்று இது..


     சாடையில் கண்களை தூது விட்டாய்,
             சாமந்தி மஞ்சத்தில் தூவி வைத்தாய்;
    ஆடையை இரவினில் பறக்கவிட்டாய்,
           ஆயிரம் முறை என்னைத்  தழுவவிட்டாய்!
    மலர் வாடையில் தலைவைத்து தூங்கிவிட்டு,
           வரவையும் செலவையும் மறந்து விட்டு;
    பாடையில் ஒருநாள் போகையிலே.
           பக்கத்தில் துணை யார் பைங்கிளியே?

   மதுவினை கொஞ்சம் பருகத் தந்தாய்,
           மலரிதழ் தேனையும் அருந்தத் தந்தை;
   புதுவித சுகம் தரும் கலைஞன் என்றாய்,
          பூங்கவி இசைதரும் கவிஞன் என்றாய்;
   வதுவையின் சுகம்தர உருகி நின்றாய்,
          வஞ்சிக் கொடியென குனிந்து நின்றாய்!
    எதுவரை உறவுகள் சொல் கிளியே.?
         இறந்தபின் துணை யார் சொல் மொழியே!

    ஆறடிக் கூந்தல் உன் சொந்தமடி,
            ஆயிரம் கனவுகள் நம் பந்தமடி!
    தேரென மென் நடை  நடந்திடுவாய்,
            தெள்ளென மின் இடை மிளிர்ந்திடுவாய்!
     ஆரிந்த மானென மனம் வியக்கும்,
             இடை கொடி தழுவிட கரம் துடிக்கும்,
     ஆரடி இறந்தபின் துணை வருவார்?
             ஆறடி நிலம்தான் அணைத்திடுமே!

இந்த கவிதையை எழுதியது நானில்லை..! எழுதியவரைப் கண்டுபிடித்து  சொல்பவர்களுக்கு,   ஒரு அன்பு..   மு...... ....த் ........





  

Saturday, 11 May 2013

இந்திய ஜனநாயக லட்சணம்..


      ஒருவழியாக  பாராளுமன்ற முடக்கத்திற்கு பிறகும், உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு பிறகும் காங்கிரசின் அஸ்வினி குமாரும், பவன் குமார் பன்சாலும் தங்களது பதவியை ராஜினாமா செய்து இருகிறார்கள். காங்கிரஸ் செய்ய வைத்து இருக்கிறது.!

       இரண்டு அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து விட்டதன் மூலம் ஊழல்,முறைகேடுகளை செய்தவர்கள் நீக்கப்பட்டு விட்டார்கள்,காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருகிறார்கள்!


        இந்திராகாந்தி படுகொலையை ஒட்டி, சீக்கியர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்.  குற்றஞ் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டு உள்ளார்! 

      2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழலின்போது..,  ஆ.ராஜா ராஜினாமா செய்தார். ஏர்டெல் நிறுவன உரிமை மாற்றத்துக்கு உடந்தையாக செயல்பட்டார் என்று தயாநிதி மாறன் ராஜினாமா நடந்தது.


       ஆனால், 2ஜி வழக்கு சி.பி.ஐ  நடவடிக்கையால்  இன்று  தீவிரத்தை இழந்துவிட்டது!   உச்ச நீதிமன்ற கண்காணிப்பு,கண்டிப்பு இல்லாமல் போனால்,  நிலகரி சுரங்க ஒதுக்கீடு விவகாரமும், ரயில்வே நியமன விவகாரமும்  (2ஜி-ஸ்பெக்ட்ரம் விவகாரத்தைப் போலவே)  தீவிரம் இழந்துவிடும் என்பதை எதிர்பார்க்கலாம்.

        மும்பையில் நடந்த   ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் முறைகேட்டை  மக்களே  மறந்துவிட்டதைபோல...,

         காமன்வெல்த் விளையாட்டு முறைகேடுகளை  கண்டு கொள்ளாததைப் போல, ஹெலிகாப்ட்டர் வாங்குவதில் ஏற்பட்ட  முறைகேட்டை மறந்து விட்டது போல...,  

   இப்போது பரபரப்பாக்கப் பட்டு உள்ள   ஊழல், முறைகேடுகளும்  மறக்கப்பட்டுவிடும். அல்லது  ஆதாரங்கள், சாட்சியங்கள் எரிக்கபட்டோ,காணமல்  போய்விட்டது என்றோ கூறி குற்றஞ் சாட்டப் பட்டவர்கள்  விடுவிக்கப்பட்டு, நிரபராதிகளாகஆக்கப்படுவார்கள்.

      அவர்களுக்கு பாராட்டு வழங்கி, மீண்டும்  ஆட்சியில் அமர வைத்து ,  ஊழல் முறைகேடுகளைச் செய்ய   காங்கிரஸ் கட்சிமீண்டும்  வாய்ப்பளிக்கும்.   மக்களும் மறந்துவிட்டு, வாக்களித்து மீண்டும் அவர்களை ஆட்சியில் அமரச்  செய்வார்கள்.!  இப்படித்தான் நடக்கிறது  நமது இந்திய ஜனநாயகமும், நமது ஆட்சியின் லட்சணமும்.!

     இன்றுவரை ஊழல்கள்,முறைகேடுகள் ஒழிந்த பாடில்லை! ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்களுக்கும்  அளவே இல்லை! அதற்காக அவர்கள்  தண்டனை பெறுவதும் இல்லை.! என்கிறபோது,  எதற்கு இந்த வழக்கு,விசாரணை,  ராஜினாமா  நாடகங்கள் ? தெரியவில்லை!

   எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? 
   எத்தனை காலந்தான் ஏமாறுவார்கள் நம்ம மக்களுமே!

     

Friday, 10 May 2013

கர்நாடக காங்கிரஸ் முதல்வர்கள்..!

        மழைவிட்டும் தூறல் நின்றபாடில்லை என்பதுபோல,  தேர்தல் முடிந்தும்,பெரும்பான்மை பெற்றும் கூட காங்கிரசால்  ஆட்சிபொறுப்பு  ஏற்க முடியாத நிலை கர்நாடகாவில் இருக்கிறது.! காரணம், காங்கிரசின் கலாசாரமான  கோஷ்டிகள்,குழுக்கள்  கர்நாடக காங்கிரசிலும் இருப்பதுதான்.



       காங்கிரஸ் கட்சியின் முதல்வர் போட்டிலில்  சித்தராமையா, பரமேஸ்வர்,மல்லிகார்ஜுன கார்கே, ஆர்.வி.தேஷ் பாண்டே, வீரப்பமொய்லி எஸ்.சிவஷங்கரப்பா, டி.கே சிவகுமார்,  டி.பி.ஜெயச்சந்திரா, ஆகியோர்கள் இருகிறார்கள்!  இவர்களில் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் மற்றவருக்கு வருத்தம் ஏற்பட்டு, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமோ, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்குமோ என்ற கவலை காங்கிரசுக்கு இருப்பது தெரிகிறது!



        கர்நாடக முதல்வராக விரும்பும் இவர்களில் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே,  இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது.
 இவர்களில், யார் முதல்வராக வந்தாலும் கர்நாடக  பொதுமக்கள் வரவேற்கவே செய்வார்கள்.!

            முதல்வர் போட்டியில் தொடக்கி, ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும்  செயலில் ஈடுபட்டு, ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், நல்ல ஆட்சியை,தந்தால்  போதும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.!

          கடந்த முறை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி செய்த தவறுகளை காங்கிரஸ் கட்சியும் செய்யகூடாது  என்பதை  காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும்  புரிந்து கொள்ளவேண்டும்!